நவகயிலாயத்தில் ஐந்தாவதாக விளங்கும் இத்தலத்தின் இறைவன் குரு பகவான் அம்சமாக விளங்குகிறார்.
முறம்பு என்ற சொல்லுக்கு பருக்கைக் கற்கள் நிரம்பிய மேட்டு நிலம் என்று பொருள். சூரபத்மனைச் சேர்ந்த அசுரர்களின் அட்டூழியங்களைத் தாங்க முடியாத முனிவர்கள் இறைவனிடம் முறையிட்ட இடம் என்பதால் முறப்பநாடு என்று பெயர் வந்ததாகவும் சொல்லப்படுகிறது. தவிர ஊருக்கு அருகிலுள்ள முறப்பேஸ்வரர் கோயிலின் பெயரே இவ்வூருக்கு வந்தது என்றும் கூறுவார்கள்.
இப்பகுதியில் தாமிரபரணி ஆறு வடக்கிலிருந்து தெற்கு நோக்கிச் செல்கிறது. காசியில் கங்கை இதுபோல் செல்வதால் இந்த நதிக்கு தட்சிண கங்கை என்று பெயர். இதனால் இங்கு நீராடுவது கங்கையில் நீராடுவதற்குச் சமம் என்கிறார்கள். ஆற்றின் மேற்குக் கரையில் கோயில் உள்ளது அதற்கு எதிரில் கிழக்கில் ஆற்றுக்குள் ஒரே கல்லில் பத்து உருவங்கள் பொறிக்கப்பட்ட சிலைகள் உள்ள தசாவதாரக் கட்டமும், காசிக் கட்டமும், சவரி தீர்த்தமும் இங்கு உள்ளன. இந்தக் கோயிலைக் கட்டியவர் வல்லாள மகாராஜர்.
மிருகண்ட முனிவர் பாதயாத்திரை செய்த இடம் என்றும். காஞ்சன மாலைக்கு மோட்சம் கிடைத்த இடம் என்றும் தல வரலாறு கூறுகிறது.
சோழ மன்னன் ஒருவனுக்கு குதிரை முகத்துடன் ஒரு பெண் குழந்தை பிறந்தது. இதனால் மனம் வருந்திய மன்னன் சிவபெருமானை நோக்கி கடுந்தவம் புரிய அவரும் zஅந்த மன்னன் முன் தோன்றி இந்த ஊர்த் தீர்த்தக்கட்டத்தில் நீராடும்படி பணிக்க மன்னனும் தன் மகளோடு இங்கு வந்து நீராட, மகளின் முகம் மனித முகமானதாம். இதனால் மனமகிழ்ந்த சோழ மன்னன் இந்தக் கோயிலைக் கட்டினார் என்றும் ஒரு கதை உண்டு.
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருநெல்வேலி மாவட்டத்தின் தலைநகரான திருநெல்வேலியிலிருந்து சுமார் 18 கி.மீ தொலைவில் உள்ளது இத்தலம்.
மூலவர் : முறப்பேஸ்வரர், கைலாசநாதர்
தீர்த்தம் : தாமிரபரணி, தட்சிணகங்கை,. சவரி தீர்த்தம்.