பித்ரு தோஷம் என்பது நளமகாராஜாவை பற்றிய சனி தோஷத்தைவிட கொடுமையானது; யாரையேனும் கொல்வதால் வரக்கூடிய ப்ரம்ம ஹத்தி தோஷம் என்பதனைவிடக் கொடியது. ராவணேஸ்வரனை கொன்ற கடவுளான ராமனும் சூரபத்மன் என்ற கொடியவனை அழித்த முருகனுமே பிரம்மஹத்தி தோஷத்திற்கு பயந்து பல பரிகாரங்கள் செய்தனர்.
முனிவர்களும் சித்தர்களும். தோஷத்தைவிட கொடுமையானது பித்ரு தோஷம். அதை அறவே அழிக்க வல்லவர் சூரிய பகவான். திருமங்கலக்குடி’ என்ற நாகபூமியில், சூரியன், நவநாயகர்கள் புடை சூழ கம்பீரமாக வீற்றிருக்கிறார்.
பக்தர்களை காப்பதற்காக சப்தம் என்ற ஏழு வர்ணங்களை கொண்ட ஏழு குதிரைகளைக் கொண்டு, ஒற்றை சக்கரத்தை உடைய, அச்சு இல்லாத தேரில், தாமரை மலரை கையில் தாங்கி, பக்தர்களின் குறைகளை குருபகவான் எடுத்துரைக்க, மேற்கு நோக்கி, திருமகள் அம்சமுடைய உஷாதேவி மற்றும் சாயாதேவியுடன் காட்சி தர, ஏனைய கிரஹாதி தேவர்கள், மூலவரான சூரியனை சுற்றி வருகின்றனர்.
சனி பெயர்ச்சியால் ஏற்பட்டிருக்கக் கூடிய பாதிப்புகளை, சிவன்-பார்வதி- முருகனுக்கு அபிஷேகம் அர்ச்சனை செய்து பின் சூரியனாரை மனமுருக பிரார்த்தித்தால், எப்படிப்பட்ட சனி தோஷமும் விலகும்.
சுக்ரீவன், அனுமனுடன் இந்த தலத்திற்கு வந்து சாந்தி செய்து, ராமனின் உதவியுடன் வாலியை வீழ்த்தி, தனது மனைவியோடு நாட்டையும் மீட்டான் என்கிறார், அகஸ்தியர். ரத சப்தமி, குருபெயர்ச்சி, சனி பெயர்ச்சி நாட்களிலும் ராகு-கேது ப்ரீதி போன்றவற்றிற்கும் ஒவ்வொருவரும் கண்டிப்பாக சென்று ஆராதிக்க வேண்டிய தலமே இந்த சூரியனார் கோயில். கச்சப மகரிஷி, தனது தவத்தின்போது நாராயணரை நினைத்து ‘ஓம்’ என்றார். அப்போது அவர் முன் தோன்றியவர்கள் சூரியன், யமதர்மராஜன், வைவஸ்வத மனு ஆகிய மூவருமே. அதாவது, ‘ஓம்’ என்ற ஒலியில் தோன்றியவர் சூரியன். இந்த சூரியனுக்கு, யமுனை நதியே மகளாகிறாள். யமுனை நதியோடு பின்னிப் பிணைந்தது கிருஷ்ணாவதாரம்.
இந்த சூரியனாரின் கோயிலில் உள்ள சூர்ய புஷ்கரிணி என்ற தீர்த்தத்தில் நீராடினால், யமுனை நதியில் நூற்றி எட்டு முறை நீராடியதற்கு சமம் என்கின்றார் அகஸ்தியர். இங்கு உறைகின்ற கலி தீர்த்த விநாயகர் பக்தர்கள் குறைகளை கேட்டு சூரியனாரிடம் சொல்வார். இது ஒவ்வொரு ஞாயிறு மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் நடைபெறுவதால் இந்த நாட்களில் சூரியனார் கோயிலுக்குச் செல்வதும் ஆவணி மாதத்தில் வரும் கிருத்திகை, உத்திரம் மற்றும் உத்திராட நட்சத்திர நாட்களில் சூரியனாரை வழிபடுதலும் நல்ல பலன் தரும்
ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரம், அனுமன் சாலீசா போன்ற ஸ்லோகங்களை இந்த க்ஷேத்திரத்தில் அமர்ந்து 12 முறை பாராயணம் செய்தால், களத்திர தோஷம் நீங்கும். விவாகம், புத்திர, கல்வி, உத்யோகம் சம்பந்தமான அனைத்து தோஷங்களும் முற்றிலுமாகக் களையப்படும். காசி விஸ்வநாதரையும் விசாலாட்சி தாயாரையும் பிரார்த்தித்த பின், சூர்ய காயத்ரியை நூற்றி எட்டு முறை உச்சரித்தபடி தாமரை மலர்களை சமர்ப்பிப்பது பெரும் நல்விளைவுகளை உண்டாக்கும். இவ்வாறு 12 ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிய உதய நேரத்தில் பாராயணம் செய்தால் அஷ்டம சனி, ஏழரை சனி, கண்டகச்சனி போன்ற 12 வித சனி தோஷங்கள் நிவாரணம் ஆவதுடன் பிள்ளைகளுக்கு நல்ல வரன் அமையும். வீடு, நிலம், வாகனம் விருத்தி அடையும்.
சர்க்கரை பொங்கல் செய்து தாமரை மலர், வெண்பட்டு, மஞ்சள், கரும்பு, பால், பழம், இளநீர், வெள்ளை எருக்கு போன்றவற்றை சூரியன் உதிக்கும் திக்கில், அதிகாலைப் பொழுதில், தை முதல் நாள் படைத்து, நெல், கோதுமை தானியங்களை படைத்து, தானம் செய்தால், அந்த வீட்டில் திருமகள் மகிழ்வுடன் நித்ய வாசம் செய்வாள்