இத்தலம் நவகைலாயங்களில் ஒன்றான ராகு தலமாகும். லிங்கமாக இருக்கும் இறைவனின் உடலில் நாகம் இருப்பது தமிழகத்தில் இங்கு மட்டும் தான்.
கால சர்ப்ப தோஷம், நாகதோஷம் நீங்குவதோடு, வேலை வாய்ப்பில் உயர்வு, புதிய வேலை வாய்ப்பு வேண்டுபவர்கள் இங்கு வழிபட்டு சென்றால் பலன் கிட்டும்.
குழந்தையில்லா பெண்கள் இறைவனை வணங்கி மூன்று முறை கோயிலை வலம் வந்தால், குழந்தை பாக்கியம் கிட்டும். பெண்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறியவுடன் இங்கு வந்து பால் அபிஷேகம் செய்கிறார்கள்.
முன் மண்டபத்தில் அம்மன் தெற்கு நோக்கி அருள்பாலிக் கிறாள். கருவறையில் உள்ள கோதபரமேஸ்வரர் நெஞ்சில் ஒரு சர்ப்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஒரு காலத்தில் குன்னத்தூரில் வாழ்ந்து வந்த அரசன் தங்கியிருக்கும் இடம் அருகே ஒரு அதிசய மரம் இருந்தது. அந்த மரத்தில் ஒரு ஆண்டில் ஒரு பூ பூத்து ஒரு பழம் மட்டுமே பழுக்கும். அந்த அதிசய கனியை அரசன் மட்டுமே உண்ணுவான். ஒரு முறை அந்த மரத்தின் பக்கமாக தண்ணீர் எடுத்து சென்ற ஒரு பெண்ணின் குடத்தில் மரத்தில் பழுத்திருந்த பழம் விழுந்து விட்டது.
இதை அறியாத பெண் வீட்டிற்கு சென்று விட்டாள். மரத்தில் பழத்தை காணாத அரசன் காவலர்களை அனுப்பி வீடு வீடாக பழத்தை தேடச்சொன்னான். இதற்குள் குடத்திலிருந்த தண்ணீரை எடுக்கும் போது அதற்குள் பழம் இருப்பதைக்கண்டு, அந்தப்பழத்தை அரசனிடம் கொண்டு போய் கொடுத்தாள்.
இந்த பெண்ணே பழத்தை திருடிக்கொண்டு வந்து நம்மிடம் கொடுத்து நல்லபெயர் எடுக்கிறாள் என நினைத்த அரசன் அவளை கழுவேற்ற உத்தரவிட்டான். அந்த பெண் இறக்கும் தருவாயில் நீதியற்ற இவ்வூரில் பெண்களும், குழந்தைகளும், பசுக்களும் தவிர மற்றவை அழியட்டும் என சாபமிட்டாள். எனவே இத்தலத்திற்கு வந்து வழிபடும் பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பதாக கூறப்படுகிறது.
